புதுக்கோட்டை திருமயம் கோட்டை

No comments

Peravurani Town :









திருமயம் மலைக்கோட்டை 1676 ஆம் வருடம் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் (மறவ மன்னர்கள் தங்களை சேதுபதி என்றழைத்துக் கொண்டனர்) விஜயரகுநாத சேதுபதி என்னும் கிழவன் சேதுபதியின் (கிபி 1671–1710) காலத்தில் கட்டப்பட்டது. இன்றும் இக்கோட்டை ஒரு வரலாற்றுச் சின்னமாக இந்திய அரசின் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகின்றது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் என்.சுப்பையன் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதிர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

No comments

Peravurani Town :

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் என்.சுப்பையன் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதிர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன் மற்றும் அலுவலர்கள் விவசாயிகள் உடன் இருந்தனர்.

பேராவூரணி வட்டாரத்தில் உரங்களை அதிக விலைக்கு விற்றால்!!!

No comments





பேராவூரணி வட்டாரத்தில் உரங்களை அதிக விலைக்கு விற்றால் +919698580420 என்ற எண்ணில் புகார் அளிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் :: உரத்தை அதிக விலைக்கு விற்றால் சட்டப்படி நடவடிக்கை என ஆட்சியர் எச்சரிக்கை.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் என்.சுப்பையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் உள்ள உரக்கடைகளில் தரமான உரங்கள் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்குவதற்கு உரிய
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உரக் கட்டுப்பாட்டு ஆணையின்படி செயல்பட
அனைத்து உரக்கடைகளுக்கும் உரிய அறிவுரை வேளாண்மைத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆணையின்படி செயல்படாத உரக்கடைகள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உரக்கட்டுப்பாட்டு ஆணைப்படி உர உரிமம் பெற்று விற்பனை செய்வது, உர உரிமத்தில் மேற்சேர்க்கை வழங்கிய
நிறுவனங்களின் உரங்களை மட்டுமே விற்பனை செய்வது, உர
மூட்டைகளில்
குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கு மிகாமல் விற்பனை செய்வது போன்ற விதிமுறைகளை அனைத்து கூட்டுறவு, தனியார் விற்பனையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
உர இருப்பு விவரம் மற்றும் விலை விவரத்தைக் குறிப்பிட்டு விலை விவரப்பலகை நன்கு தெரியும் விதத்தில் கடையில் வைக்கப்பட வேண்டும். மேலும், விவசாயிகள் உர மூட்டைகளை வாங்கும்போது
பற்றொப்ப ரசீது கேட்டு, அதில் கையெழுத்து இட்டு வாங்க வேண்டும். அதிக விலைக்கு விற்றால் அப்பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது 9750969401 (தஞ்சாவூர்), 9750969402 (பூதலூர்), 9750969403 (திருவையாறு), 9750969404 (ஒரத்தநாடு), 9750969405 (திருவோணம்), 9750969406 (பட்டுக்கோட்டை), 9750969407
(மதுக்கூர்), 9698580420
(பேராவூரணி), 9750969409
(சேதுபாவாசத்திரம்), 9750969410 (பாபநாசம்), 9750969411 (அம்மாபேட்டை), 9750969412 (கும்பகோணம்), 9750969413
(திருவிடைமருதூர்), 9750969414
(திருப்பனந்தாள்) ஆகியவற்றில் தொடர்புடைய பகுதி
செல்லிடப்பேசி எண்களிலோ தெரிவிக்கலாம்.
மேலும் உர விற்பனை நிலையங்களில் ஏதேனும்
குறைபாடு இருந்தால் தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தை 04362 267679 அல்லது வேளாண்மை உதவி
இயக்குநரை (தரக்கட்டுப்பாடு) 9750969417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தஞ்சாவூர்: தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்திய நிலையில் வெப்பசலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து உள்ளது.

No comments

தஞ்சை மாவட்டத்தில் நேற்று மாலை சில இடங்களில் மழை பெய்தது. தஞ்சையில் நேற்று மாலை முதல் இரவு வரை தூறல் மழை பெய்தது. திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய இடங்களிலும் நேற்று மழை பெய்தது. இன்று காலையும் வானம் கறுத்து மேகமூட்டமாக இருந்தது. இதைத்தொடர்ந்து தூறல் மழை பெய்து வருகிறது. இதனால் காலை நேரதத்தில் பணிகளுக்கு செல்பவர்கள் குடைபிடித்து சென்றனர்.
திருவாரூர் மாவட்டத்திலும் நேற்று இரவு மழை பெய்தது. திருவாரூர், மன்னார்குடி, நீடாமங்கலம், கொரடாச்சேரி உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
நாகை மாவட்டத்திலும் நேற்று தூறல் மழை பெய்தது. நாகை, வேதாரண்யம், தலைஞாயிறு, மயிலாடுதுறை ஆகிய இடங்களிலும் மழை பெய்தது. இந்த மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் வெப்பம் தணிந்து குளிர்காற்று வீசிகிறது. குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த மழை பயிரின் வளர்ச்சிக்கு உதவும் என்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டையில் இப்படி ஒரு கோவில் இருப்பது இன்று தான் தெரிந்தது 1400 வருடங்களுக்கு முன்பு ‪பல்லவர்கள்‬ மற்றும்‪ சோழர்களால்‬ கட்டப்பட்டது இந்த குடைவரை கோவில்.

No comments







புதுக்கோட்டை‬ மாவட்டம் நார்த்தாமலையில்‬ தான் இந்த அழகிய கோவில் வீற்றிருக்கிறது.
‪‎தமிழர்களின்‬ கட்டிடக்களை‬ சிறந்து விளங்கயிதற்கு ஓர் சான்று.
‪‎புதுக்கோட்டையில்‬ இருப்பது எத்தனைபேருக்கு தெரியும்...?
இது ஒரு சுற்றுலாதலமாக‬ மாறினால் உலகிற்கே தெரியும் நமது கலையின் சிறப்பு.
ஏனோ அதனால்தான் நமது அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்று நினைக்கிறன்!!!

கந்தர்வக்கோட்டை வித்யா விகாஸ் பள்ளியில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்.

No comments









உலகம் முழுவதும் சர்வதேச ‪#‎யோகா‬ தினம் நேற்று ஜூன் 21 கொண்டாடப்பட்டது. இதையொட்டி கந்தர்வக்கோட்டை வித்யா விகாஸ் பள்ளியில் மாணவர்களுக்கான யோகாசன பயிற்சிகள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்படிருந்தது . பள்ளியின் அறங்காவலர் டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் ஏறத்தாள 3000ற்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர் பள்ளியின் முதல்வர்கள் N.நாகமாள் மற்றும் சரவணா ஐயப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு துவக்க வழாவில் புதிய மாணவர்களை வரவேற்ற காட்சி

No comments

தஞ்சை மாவட்டத்தில் 3 இடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நாளை தொடங்கப்பட உள்ளது என்று கலெக்டர் சுப்பையன் தெரிவித்தார்.

No comments

தென்னை விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் கொப்பரை தேங்காய் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் மாவட்டங்களில் ஒன்றான தஞ்சை மாவட்டத்தில் கொப்பரை தேங்காயை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் தென்னை விவசாயிகளிடம் இருந்து கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வது குறித்து கலந்தாய்வு கூட்டம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பையன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பட்டுக்கோட்டை வெண்டாக்கோட்டை ரோடு வளவன்புரத்தில் உள்ள தென்னை வணிக வளாகத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் வாரத்தில் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய கிழமைகளில் செயல்படும். பேராவூரணி அருகே பள்ளத்தூரில் உள்ள வேளாண்மை வணிக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளிலும், ஒரத்தநாடு சி.எம்.எஸ். வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய கிழமைகளிலும் செயல்படும். கொள்முதல் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.
கொள்முதல் காலை 9 மணி முதல் மாலை 6 மணி முதல் நடைபெறும். எனவே வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை அலுவலர்களை தென்னை விவசாயிகள் அணுகி உரிய அடையாள அட்டை பெற்று தங்களிடம் உள்ள கொப்பரை தேங்காய்களை விற்பனை செய்து பயன் பெறலாம். மேலும் இது பற்றிய விவரங்களை ஒரத்தநாடு பகுதி விவசாயிகள் 04372-233231 என்ற எண்ணிலும், பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதி விவசாயிகள் 04373-235045 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

கல்லணைக்கால்வாயில் ஆய்வு

No comments




கல்லணைக்கால்வாயில் ரூ.5 கோடியில் பாலம் கட்டும் பணி கலெக்டர் சுப்பையன் ஆய்வு
தஞ்சையை அடுத்த ரெட்டிபாளையத்தில் கல்லணைக்கால்வாயில் ரூ.5 கோடியில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதை கலெக்டர் சுப்பையன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கல்லணைக்கால்வாயில் பாலம்
தஞ்சையை அடுத்த ராமநாதபுரம் ஊராட்சியில் தஞ்சை- பூதலூர் இடையில் ரெட்டிப்பாளையத்தில் கல்லணைக்கால்வாயில் இருந்த பாலம் சேதம் அடைந்து காணப்பட்டது. எனவே இந்த இடத்தில் புதிய பாலம் கட்ட வேண்டும் என அந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து ரெட்டிப்பாளையத்தில் உள்ள கல்லணைக்கால்வாயில் நெடுஞ்சாலைத்துறையின் நபார்டு மற்றும் கிராம சாலையின் மூலம் ரூ.4 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது பாலம் கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
நேரில் ஆய்வு
புதிய பாலம் கட்டும் பணியினை தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், “கல்லணைக் கால்வாயின் மேல் கட்டப்பட்டு வரும் பாலத்தின் இருபுறங்களில் தடுப்பு சுவர் மற்றும் அணுகு சாலை ஆகியவற்றை விரைந்து அமைக்க வேண்டும். மேலும் பாலத்தின் இருபுறமும் நடுவில் அமைந்துள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றார். ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலை கோட்ட பொறியாளர் கந்தசாமி, உதவி பொறியாளர் பாபுராமன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

சரசுவதிமகால் நூலகத்தில் தமிழ்ச்சுவடியியல் பயிற்சி வகுப்பு 8-ந் தேதி தொடங்குகிறது

No comments



 தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
உலக புகழ் பெற்ற பன்மொழி ஓலைச்சுவடிகள் நிறைந்த நூலகமான தஞ்சை சரசுவதிமகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ச்சுவடியியல் பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு அடுத்தமாதம் (ஜூலை) 8-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 3 வார காலத்திற்கு தமிழ் ஓலைச்சுவடிகளை படித்தறியும் விதமாக தமிழ்ச்சுவடியியல் பயிற்சி வகுப்பு நடக்கிறது. பதிப்பிக்கப்படாத தமிழ்ச்சுவடிகளை பதிப்பிக்கவும், பதிப்பிக்க பெற்ற நூல்களை மீளாய்வு செய்து புதிய கருத்துக்களை வெளி கொண்டு வருவது தான் இந்த பயிற்சியின் நோக்கம். பனை ஓலைகளில் எழுதுவதற்கு பயிற்சி வழங்க உள்ளோம். பயிற்சி பெறும் மாணவர்களுக்குரிய பாடநூல், எழுது பொருட்கள் போன்றவையும் வழங்கப்படும்.
தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர்களும், சித்த மருத்துவத்தில் பட்டம் பெற்றவர்களும், ஜோதிடவியலில் பட்டம் பெற்றவர்களும் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 45 வயதிற்குள் இருக்க வேண்டும். பயிற்சியில் சேர தேர்வு பெற்றவர்கள் ரூ.100 மட்டும் பதிவு கட்டணமாக பயிற்சி தொடங்கும் நாளில் செலுத்த வேண்டும். பயிற்சி வகுப்பு நாள்தோறும் காலை 10.30 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.
இந்த பயிற்சி வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை நூலகத்தின் வேலை நாட்களில் வந்து பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் உறையின் மேல் தமிழ்ச்சுவடியியல் பயிற்சி வகுப்பு என்று குறிப்பிட்டு இயக்குனர், சரசுவதிமகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சை-613009 என்ற முகவரிக்கு வருகிற 5-ந் தேதிக்குள் நூலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் வழியாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரம் பெற 04362-234107 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோடிகள் புரளும் பேராவூரணி மொய்விருந்து!

1 comment

Peravurani Town :


தமிழகத்தில் எங்கும் இல்லாத பேராவூரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடைபெறும் வினோத விழா.
தமிழகத்தில் “மொய்விருந்து” என்ற பெயரை யாரிடம் சொன்னாலும் அவர்களுக்கு முதலில் ஞாபகம் வருவது சின்னக்கவுண்டர் திரைப்படமும், விஜயகாந்தும் சுகன்யாவும் தான், ஆனால் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டப்பகுதிகளில் யாரிடம் “மொய்விருந்து” என்ற வார்த்தையை கூறினாலும் அவர்கள் கூறும் ஒரே வார்த்தை “பேராவூரணி” தான். அது என்ன மொய்விருந்து?? அதுக்கும் பேராவூரணிக்கும் என்ன சம்பந்தம் என அனைவரும் கேட்கலாம்.
ஆடிமாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழா களை கட்டும். பொங்கல் வைக்கவும், பால் குடம் எடுக்கவும், கூழ் ஊத்தவும் கூட்டம் கூட்டமாய் மக்கள் படை எடுக்கத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் பேராவூரணி மற்றும் அதன் சுற்றூவட்டாரப்பகுதிகளில் சற்று வித்தியாசமாக மொய்விருந்து விழா களை கட்டத்தொடங்கிவிடும். 1967 ஆம் ஆண்டிற்குப்பிறகுதான் இந்த மொய்விருந்து நடைமுறை அதிகமாக காணப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் உள்ள பேராவூரணியில் நடைபெறும் வினோத விழாவான மொய்விருந்து தற்போது சேதுபாவாசத்திரம் பகுதிகளிலும் திருச்சிற்றம்பலம் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் வரையிலும் பரவிவருகிறது.
தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, தேனி மாவட்டங்களுக்கு இது மொய் விருந்து சீசன். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு கைகொடுப்பதற்காக நடத்தப்பட்ட இந்த மொய்விருந்து வைபவங்கள் பேராவூரணியில் சில புதிய விதிமுறைகளுடன் ஒரு குறிப்பிட்ட தொகையை மொய் போட்டவர்களிடமிருந்து இரண்டு மடங்காக வசூலிக்கும் ‘வசூல் மேளா’வாக நடத்தப்பட்டுவருகிறது. மற்றவர்களுக்கு செய்த மொய் பணத்தை இரண்டுமடங்காக வசூலிப்பதற்காகவே 5 முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்பகுதி மக்கள் மொய்விருந்து என்னும் வினோத விழாவை வைக்கிறார்கள்.
இந்த மொய்விருந்து விழா பேராவூரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஆடி, ஆவணி மாதங்களில் நடத்தப்படுகிறது. இந்த விழாவின் போது, பேராவூரணியில் எல்லா விழா மண்டபங்களிலும் தினந்தோறும் மொய்விருந்து விழா நடைபெறும். இதற்கென பேராவூரணியின் பல இடங்களிலும் ஃபிளக்ஸ் போர்டு வைத்து, பத்திரிகை கொடுத்து மொய் விருந்துக்கு அழைக்கிறார்கள். இதற்கென அச்சிடப்படும் சிறப்பு அழைப்பிதழின் அடியில், ‘என்னால் சிலபேருக்கு இரண்டு மூன்று தடவைகள் மொய் செய்யப்பட் டுள்ளது. எனவே இதையே எனது நேரடி அழைப்பாக ஏற்று விருந்துண்டு மொய் செய்து விழாவை சிறப்பித்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்’ குறிப்பிட்டிருப்பார்கள். பேராவூரணி நகரில் வீதிக்கு வீதி ப்ளெக்ஸ் பேனர்களில் மொய்விருந்து வைப்பவர்கள் சிரித்துக்கொண்டிருப்பார்கள்.
இந்த விழாவின் போது பேராவூரணி நகர் முழுவதும் ஆட்டுக்கறி குழம்பும், அரிசி சோறின் வாசனைக்காகவே பலர் மொய்விருந்து நடைபெறும் மண்டபங்களை சுற்றிவருவர். மொய்விருந்தின் போது நெல்லுச்சோறும் ஆட்டுக்கறி குழம்பும் பரிமாறப்படும். இந்தக்குழம்பிற்கென்று தனிச்சுவை உண்டு. மிளகுக்காரம் தூக்கலாக இருப்பதால் வயிற்றுக்கு கேடில்லை. காலமாற்றத்திற்கு ஏற்ப இப்போதெல்லாம் கோழிக்கறியும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. மிகச்சில விருந்துகளில் மட்டுமே சைவம் பரிமாறப்படும். அசைவ விருந்துகளில் அசைவம் சாப்பிடாதவர்களுக்கு தனியாக சைவ உணவு வழங்கப்படும். ஒரேநாளில் பல மொய்விருந்துகளுக்கு பணம் போட்டுவிட்டு பலவீடுகளிலும் சாப்பிடுபவர்கள் உண்டு. சைவ சாப்பாடுகளை கொண்டு மொய்விருந்து நடத்துபவர்களுக்கு அவ்வளவாக மரியாதை இல்லை.
இந்த மொய்விருந்தில் சாப்பிடுபவர்கள் அனைவரும் பந்தி தொடங்கும் போது சாப்பிட தொடங்கவேண்டும், அனைவரும் சாப்பிட்டு பந்தியிலிருந்து எழுந்துவிட்டால் யாரும் சாப்பிட்டுக்கொண்டிருக்க கூடாது, உடனே இலையை மூடிவிட்டு எழுந்துவிட வேண்டும். குறிப்பாக மொய் போட்டவர்கள் மட்டுமே சாப்பிட அனுமதிக்கப்படுவார்கள், இதை கருத்தில் கொண்டு சில புத்திசாலிகள் மொய் சாப்பாடு டோக்கன் கொடுத்துவிடுத்துவிடுவார்கள்.
மொய் வசூல் செய்வதற்காக பல கவுண்டர்கள் செயல்படுவதுண்டு. அள்ளி கொடுக்கும் பணத்தை அண்டாவில் போட்டு பின்னர் கோணியில் கட்டி எடுத்துச் செல்வார்கள் விருந்து கொடுத்தவர்கள். கடந்த ஆண்டு நடைபெற்ற மொய்விருந்தில் ஒருவருக்கு ஒருகோடி ரூபாய் வரை வசூலானதாம்.
மூன்று நான்கு பேர்கள் கூட்டாகச்சேர்ந்து மொய்விருந்து நடத்துவது உண்டு. இதனால் தங்களது சாப்பாடு, மண்டபச்செலவு உள்ளிட்ட பல செலவினத்தை குறைத்துக்கொள்வார்கள். சிலர் இதில் ரொம்ப சிக்கனம் பார்த்து ஒரே மொய் பத்திரிக்கையில் 10 பேரின் அழைப்பை இடம்பெறச்செய்வர். மெய்விருந்தின் கதாநாயகனே இந்த மொய்பத்திரிக்கை தான், ஏனென்றால் ஒருவருக்கு நீங்கள் பத்திரிக்கை கொடுக்கவில்லை என்றால், அவர் உங்களுக்கு தர வேண்டிய உங்களது இருமடங்கு பணத்தை திருப்பித்தர மாட்டார். வரவினத்தை தனித்தனியாக மொய் நோட்டு என்னும் சிறப்பு நோட்டில் எழுதிக்கொள்வார்கள். இந்த மொய்வரவை எழுதுவதற்கென பலர் பேராவூரணியில் இருந்துவருகிறார்கள். இந்த மொய்நோட்டில் ஒருவர் மொய் எழுதும் போது அவர் பேராவூரணி என்றால் பேராவூரணி கணக்கிலும், வெளியூர் என்றால் பல ஊர் கணக்கிலும் வரவு வைக்கப்படுவர். மொய்ப்பணத்தை நோட்டில் வரவுவைக்கும் பணியில் மிகநெருங்கியவர்களே ஈடுபடுவார்கள். அதே போல பணத்தை வாங்கி அண்டாவில் போடுவதற்கும் ஒருவர் அமர்ந்திருப்பார்.
.
இதேப்போல பெரிய அளவில் விளம்பரம் செய்து மொய்விருந்து நடத்துவதற்கு முதலீட்டுக்கு கவலைப்பட வேண்டியதில்லை. உள்ளூரில் இருக்கும் அரசு வங்கிகளின் மேலாளர்களின் சொந்தப்பொறுப்பில் கடன் வழங்குவார்கள் விருந்து முடிந்த பிறகு ஒரு பெரிய தொகை அந்த வங்கியில் நிரந்தர முதலீடு செய்ய ஒப்புக்கொள்ள வேண்டும். சில மொய்விருந்து மண்டபங்களில் வங்கிகளின் ஸ்டால்கள் கூட இடம் பெற்றிருக்கும். மொய்ப்பணத்தை தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு, நகரங்களில் புதிய வியாபாரம் தொடங்குதல், புதிய வீடுகட்டுதல், புதிய பஸ்கள் வாங்குதல் என்றெல்லாம் முதலீடு செய்பவர்களும் இருக்கிறார்கள். பலகுடும்பங்களில் பொருளாதார ஏற்றத்திற்கும், பொருளாதார வீழ்ச்சிக்கும் இந்த மொய்விருந்துகள் காரணமாக அமைந்துள்ளன. ஒரே நாளில் ஒரே ஊரில் பலமொய்விருந்துகள் நடைபெறும்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்தாயிரக்கணக்கில் பணம் தேவைப்படும். இதற்காக அவர்கள் கடன்வாங்கி மொய்செய்வது அதிகரித்து வருகிறது. இந்தக்கடனை அடைப்பதற்காகவே பெரும்பாலோரின் மொய்விருந்து வசூல் பயன்படுகிறது என்கிற தகவல் சிந்திக்கக்கூடியது. இது போன்ற நிகழ்வுகளின் போது ஊர்பஞ்சாயத்துகூடி மொய்விருந்து எண்ணிக்கையை கட்டுப்படுத்தும்.
திருமணத்துக்கு பத்திரிகை வைத் தால்கூட போகாமல் இருந்துவிடலாம். ஆனால், மொய் விருந்து பத்திரிகையை வாங்கி வைத்துவிட்டு போகாமல் இருந்தால் அசிங்கப்பட வேண்டியிருக்கும். ஒருவர் நமக்கு ஏற்கெனவே 1000 ரூபாய் மொய் செய்திருந்தால் திருப்பி அதை இரண்டு மடங்காக 2000 ரூபாய் செய்யவேண்டும். மொய் விருந்துக்கு போகாமல் இருந்துவிட்டால், நமக்காக சமைத்த சாப்பாட்டை மறுநாள் காலையில் கூலி ஆட்கள் மூலம் கொடுத் தனுப்பி மொய் பணத்தை திருப்பிக் கேட்டு அசிங்கப்படுத்திய சம்பவங்களும் ஒரு காலத்தில் நடந்ததுண்டு. இப்போது அதுபோல ‘தரை ரேட்டுக்கு’ அசிங்கப்படுத்தாமல் கொஞ்சம் நாசூக்காக அசிங்கப்படுத்துகிறார்கள். மொய் விருந்து முடிந்த 5-வது நாள், சம்பந்தப்பட்டவரே நேரடியாக வீட்டுக்குப் போய், ‘‘உங்களுக்கு இன்னின்ன தேதிகளில் இவ்வளவு மொய் செய்திருக்கிறேன். அதை முறையாக திருப்பிக் கொடுங்கள்’’ என்று கறாராக கேட்டு வாங்கிப் போய்விடுவார். தனி ஆவர்த்தனம் போதாதென்று கோஷ்டி கானம் வேறு. ஐந்தாறு பேர் சேர்ந்து மண்டபம் பிடித்தும் கூட்டாக மொய் விருந்து கொடுத்து அவரவருக்கு வர வேண்டிய வருமானத்தை தனித் தனியாக பாகம் பிரித்துக்கொள்கிறார்கள்.
இந்த மொய்விருந்து விழாவானது, பல நன்மைகளையும், தீமைகளையும் கொண்டுள்ள விழாவாகவே பலதரப்பட்ட மக்களால் பார்க்கப்படுகிறது. மொய் விருந்துக்கு எதிராக விமர்ச னங்கள் கிளம்பினாலும் அதை நியாயப் படுத்துபவர்களும் இருக்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய பேராவூரணி தாலுகா கல்லூரணிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி, ‘‘நடுத்தர வர்க்கத்தில் இருப்பவர்கள் மொத்தமாக ரெண்டு லட்சம் மூணு லட்சத்தை பார்ப்பது கஷ்டம். அவர்கள் தங்களது வருமானத்தின் ஒரு பகுதியைச் சிறுகச் சிறுக பலருக்கும் மொய்யாக எழுதுகிறார்கள். தங்களுக்கு மொத்தமாக ஒரு தொகை தேவைப்படும்போது மொய் விருந்து வைத்து வசூலித்துக் கொள்கிறார்கள். இதுவும் ஒருவகை சேமிப்பு. வசூலுக்காக நடத்துவதுபோலத் தெரிந்தாலும், மொய் விருந்துகள் பல குடும்பங்களில் விளக்கேற்றிக் கொண்டிருக்கிறது’’ என்றார்.
இதை மறுத்துப் பேசிய பட்டுக்கோட்டை நகர மார்க்சிஸ்ட் செயலாளர் கந்தசாமி, ‘‘வீட்டில் பிள்ளைகள் இருந்தால் காதுகுத்து, சடங்கு, கல்யாணம் போன்ற திருவிழாக்கள் மூலம் மொய்ப் பணம் வசூலாகிவிடும். பிள்ளை இல்லாதவர்கள் மொய்ப் பணத்தை திரும்பப் பெறுவதற்கும் ஏழைகளுக்கு கைகொடுக்கவும்தான் ஆரம்பிக்கப்பட்டது இந்த மொய் விருந்து பழக்கம். இப்போது காரண காரியம் இல்லாமல் நடக்கிறது. ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் மொய் செய்யப்பட்டிருந்தால், அதை ரூ.20 ஆயிரமாக திருப்பித் தரும் நிலையில் அவர் இருப்பாரா? வீண் கவுரவத்துக்காக கடன் வாங்கி மொய்யை திருப்பிச் செலுத்துவார். இப்படி மொய் விருந்துக்காக கடன் வாங்கிவிட்டு பல குடும்பங்கள் கஷ்டப்படுகின்றன. இனியும் மொய் விருந்துகள் தேவையா என்று சம்பந்தப்பட்டவர்கள்தான் யோசிக்கவேண்டும்’’ என்றார்.
எது எப்படி இருந்தாலும் பேராவூரணியின் தமிழக அடையாளமாக மாறிப்போன மொய்விருந்து, பேராவூரணியில் பல கோடிகளை புரளவைத்திருக்கிறது என்பது தான் உண்மை.

பேராவூரணி நேரடி கொள்முதல் நிலையத்திற்கு கொப்பரைத் தேங்காய்களை தரம்பிரித்து கொண்டு வர வேளாண் வணிகத்துறை வலியுறுத்தல்

No comments


பேராவூரணி நேரடி கொள்முதல் நிலையத்திற்கு கொப்பரைத் தேங்காய்களை தரம்பிரித்து கொண்டு வர வேளாண் வணிகத்துறை வலியுறுத்தல் :: வேளாண் வணிக துணை இயக்குனர் விவசாயிகளுக்கு வேண்டுகோள்.
துணை இயக்குநர், (வேளாண் வணிகம்) உதயகுமார் இது குறித்து தெரிவித்துள்ளதாவது, தமிழக அரசு அறிவித்துள்ள கொப்பரை ஆதார விலை திட்டத்தின் மூலம் தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்ய நேரடி கொள்முதல் நிலையங்கள் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி ஆகிய இடங்களில் திறக்கப்பட்டுள்ளது.
இந்நேரடி கொப்பரை கொள்முதல் நிலையங்களுக்கு கொப்பரை கொண்டு வர தென்னை விவசாயிகள் அடையாள அட்டை பெற வேண்டியது அவசியமாகும். அடையாள அட்டைபெற பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலூகா விவசாயிகள் பட்டுக்கோட்டை - முத்துப்பேட்டை சாலையில் உள்ள பட்டுக்கோட்டை வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க (பிஏபிசிஎம்எஸ்) அலுவலகத்திலும், ஒரத்தநாடு தாலுக்கா விவசாயிகள் ஒரத்தநாடு ஒன்றிய அலுவலகம் எதிரில் உள்ள ஓ.சி.எம்.எஸ்.
அலுவலகத்திலும் அடையாள அட்டை பெற வேண்டும். மாவட்டத்தின் இதர தாலுகா விவசாயிகள் மேற்குறிப்பிட்ட அலுவலகங்களிலிருந்து அடையாள அட்டை பெறலாம்.
அடையாள அட்டைபெற விவசாயிகள், விவசாயி என்பதற்கான ஆதாரத்துடன் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் செல்ல வேண்டும். அடையாள அட்டை பெற்றவுடன் அந்த அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் கிராம நிர்வாக அலுவலரிடம் நில விபரங்களைப் பெற்று கையொப்பம் பெற வேண்டும். பின்பு அதே அட்டையில் பகுதி உதவி வேளாண் அலுவலரிடமும் (விரிவாக்கப் பணியாளர்) கையொப்பம் பெற்று மீண்டும் அடையாள அட்டை பெற்ற அலுவலகத்தில் ஒப்படைத்து கொப்பரை கொண்டு வருவதற்கான அனுமதியைப் பெற்று பதிவு செய்து கொள்ள வேண்டும்.
எனவே, விவசாயிகள் கொப்பரை அடையாள அட்டைப் பெற மேற்கூறிய முறைகளைக் கடைபிடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், கொப்பரை கொண்டு வரும் விவசாயிகள் பூஞ்சானம் தாக்காத, தூசி மண் இல்லாத, உடையாத அரை கிண்ண வடிவமுடைய, முழு கொப்பரைகளை கொண்டு வர வேண்டும். முக்கியமாக கொப்பரையின் ஈரப்பதம் 6 சதத்துக்குள் இருக்க வேண்டும்.
6 சத ஈரப்பதத்திற்கு மேல் உள்ள கொப்பரைகளை கொள்முதல் செய்ய இயலாத நிலை ஏற்படும். எனவே விவசாயிகள் ஈரப்பதம் 6 சதத்திற்குள் கீழாக உள்ளவாறு நன்கு காய வைக்க வேண்டும். நல்ல சதைப்பற்றுள்ள கொப்பரைகள் உலர அதிக காலமாகும் என்பதால் அவற்றைப் பிரித்து தனியே உலர வைத்தால் சதைப்பற்று குறைவாக உள்ள கொப்பரைகள் விரைவில் உலர்ந்து விடும். மேலும் காய வைக்கும் பொழுதே சுருக்கம் அதிகமுள்ள கொப்பரைகளையும். உடைந்து போன சில்லுகளையும் தனியாகப் பிரித்து எடுத்து விட்டால் நல்ல தரமான கொப்பரைகள் விற்பனைக்கு கிடைக்கும். எனவே, விவசாயிகள் மேற்கூறிய வழிகளைப் பின்பற்றி தரம் பிரித்து, கொண்டு வந்தால் உடனடியாக கொப்பரை விற்பனை செய்து, போக்குவரத்து செலவினங்களை குறைத்துப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நேரடி கொப்பரை கொள்முதல் நிலையத்தில் கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.59.50-க்கு கொள்முதல் செய்யப்படும். இது அல்லாமல் முழுதாய் உள்ள பந்து வடிவ கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ. 62.40 க்கு கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பேராவூரணி ஆத்தாளூர் ஸ்ரீ வீரமாகாளி ஆலய மகா கும்பாபிஷேக விழா

No comments

Peravurani Town :

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா கீரமங்கலத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய "சிவபெருமான்" சிலை.....

No comments

Peravurani,Thanjavur's photo.

மனோரா!!

No comments



பேராவூரணி பகுதிக்கு பெருமை சேர்க்கும் மனோரா
பேராவூரணி அருகே வங்க கடலோரம் மிக நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் மனோரா உப்பரிகை மாளிகை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. பேராவூரணியிலிருந்து 10 கிமீ, பட்டுக்கோட்டையிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ள சரபேந்திரராஜன்பட்டினத்தில் மனோரா அமைந்துள்ளது.
பிரெஞ்ச் நாட்டை ஆண்ட மாவீரன் நெப்போலியன்போன பர்ட்டை ஆங்கிலேயர்கள் 1813ம் அண்டு லிப்சிக் போரிலும், 1815ம் ஆண்டு வார்ட்டர்லூ கடற்போரிலும் வெற்றி கொண்டதன் நினைவாக ஆங்கிலேயர்களின் நிர்பந்தங்களுக்கு உட்பட்டு ஆட்சி நடத்தி வந்த தஞ்சை இரண்டாம் சரபோஜி மன்னர் எழுப்பிய நினைவுச்சின்னமே இந்த மனோரா உப்பரிகை. இந்து மற்றும் இஸ்லாமிய கலைப்பாணியில் கட்டப்பட்டுள்ளது. கபோதக & புறாக்கூடு கட்டடக்கலையின் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இரண்டு வாயிற்படிகளைக் கொண்ட இந்த மாளிகையின் வட்ட வடிவிலான முகப்புகளில் குதிரை லாயம் மற்றும் வீரர்கள் தங்குவதற்கான சிறுசிறு குடில்கள் உள்ளன. அதைத்தாண்டி மாளிகைக்குள் செல்ல ஒரு வழி உள்ளது. அதைக் கடந்தால் கோட்டையைச் சுற்றிலும் அகழி உள்ளது. இந்த அகழியில் முதலைகள் வளர்க்கப்பட்டதாகவும் இதை கடக்க ஷட்டர் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அறுங்கோண தள வடிவில் 23.3 மீட்டர் உயரமுள்ள 8 அடுக்குகளைக் கொண்ட இந்த மாளிகையின் மேல் செல்ல இரு வழிகள் உள்ளன. முட்டை, வெல்லம், சோற்றுக்கற்றாழை, சுண்ணாம்பு அடங்கிய கலவையால் கட்டப்பட்ட உட்புறச் சுவர்களின் தரம் மற்றும் கலைநயம் தற்கால நவீன கட்டட நுணுக்கங்களுக்கு சவால் விடும் வகையில் உள்ளது. இந்த உப்பரிகைளின் மேலே நின்று வங்கக்கடலைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். இந்த பகுதி 1777 முதல் 1885ம் ஆண்டு வரை துறைமுகப்பட்டினமாக இருந்துள்ளது. மனோராவிலிருந்து தஞ்சாவூர் அரண்மனை மருங்கப்பள்ளம் மருந்தீஸ்வரர் ஆலயத்திற்கு சுரங்கப் பாதை இருந்ததாகவும் காலப்போக்கில் தூர்ந்திருக்கக்கூடும் என்று இந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இங்கு தமிழ், உருது, மராட்டியம், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளில் கல்வெட்டுகளும் உள்ளன. தொல்லியல்துறை நிர்வாகத்தில் உள்ள மனோரா சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்டு சில மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளன. கோடை விடுமுறையில் மனோராவிற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

பேராவூரணியைச்சுற்றி!!

No comments


பேராவூரணி நகரை சுற்றியுள்ள பச்சைபசேல் கிராமங்களின் பட்டியல்.
பேராவூரணி நகரானது தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் உள்ள பசுமை நிறைந்த பகுதியாகும். இந்த பேராவூரணி நகரமானது வளர்ந்துவரும் நகரமாக காட்சியளித்தாலும், இதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இந்நகரமே இதயப்பகுதியாக திகழ்கிறது.
பேராவூரணியானது தனி வட்டமாகவும், ஒன்றியமாகவும், சட்டப்பேரவைத்தொகுதியாகவும் உள்ளது. இதனால் இதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இந்த ஊரானது பொருளாதார, வாழ்வியல் ஜீவாதாரமாக உள்ளது.
இந்த பேராவூரணியை சுற்றியுள்ள கிராமங்களே பேராவூரணிக்கு புகழையும், அழகையும் சேர்த்துவருகின்றன. இந்த கிராமங்கள் அனைத்தையும் நாம் தெரிந்துகொள்ளாமல் இருக்கலாமா??
பேராவூரணியை சுற்றியுள்ள கிராமங்கள் இதோ,
1.ஆத்தாளூர்
2.அம்மையாண்டி
3.ஆண்டாக்கோட்டை
4.அத்தாணி
5.ஆவணம்
6.பாலச்சேரிக்காடு
7.சின்ன ரெட்டவயல்
8.ஏனாதிகரம்பை
9.கள்ளங்காடு
10.களத்தூர்
11.கழனிவாசல்
12.காலகம்
13.கொளக்குடி
14.கொன்றைக்காடு
15.கொரட்டூர்
16.குன்றாமறைக்காடு
17.பைங்கால்
18.கல்லூரணிக்காடு
19.குருவிக்கரம்பை
20.மருங்கப்பள்ளம்
21.மாவடுகுறிச்சி
22.முடச்சிக்காடு
23.முடப்புளிக்காடு
24.கரம்பக்காடு
25.நாடியம்
26.நரியங்காடு
27.நெடுவாசல்
28.நெல்லியடிக்காடு
29.ஒட்டங்காடு
30.பத்துக்காடு
31.பெருமகளூர்
32.பின்னவாசல்
33.பொன்னாங்கண்ணிக்காடு
34.பூக்கொல்லை
35.புனல்வாசல்
36.ரெட்டவயல்
37.ருத்ரசிந்தாமணி
38.சாந்தாம்பேட்டை
39.சீவன்குறிச்சி
40.செங்கமங்கலம்
41.செருபாலக்காடு
42.சோலைக்காடு
43.சோழகனார்வயல்
44.தென்னங்குடி
45.தில்லாங்காடு
46.திருச்சிற்றம்பலம்
47.திருப்பூரணிக்காடு
48.திருவாப்பாடி
49.துறையூர்
50.வீரராகவபுரம்
51.வீரியங்கோட்டை
52.வேம்பங்குடி
53.விளங்குளம்
54.உடையநாடு
55.ஊமத்தநாடு
56.கூப்புளிக்காடு
57.ஆதனூர்
58.செருவாவிடுதி
59.உப்புவிடுதி
60.புனல்வாசல்
61.மேற்பனைக்காடு
62.செங்கமங்கலம்
63.கழனிக்கோட்டை
64.இரண்டாம் புளிக்காடு
65.நாட்டாணிக்கோட்டை
66.செங்கொல்லை
67.பள்ளத்தூர்
68.புதுத்தெரு
69.மந்திரிப்பட்டிணம்
70.கழுமங்குடா
71.திருவத்தேவன்
72.பாலத்தளி
73.நீலகண்டபுரம்
74.முடச்சிக்காடு
75.சித்துக்காடு
76.சித்தாதிக்காடு
77.இடையாத்தி
78.ஆயிங்குடி
79.பட்டத்தூரணி
80.தொந்துபுளிக்காடு
81.கரிசவயல்
82.பூவானம்
83.சொக்கநாதபுரம்
84.ஆனைக்காடு
85.சம்பைபட்டிணம்
86.அடைக்கத்தேவன்
87.வில்லுனிவயல்
88.மரக்காவலசை
89.வாத்தலைக்காடு
90.ரெகுநாதபுரம்
91.பழையநகரம்
92.துறவிக்காடு
93.பஞ்சநதிபுரம்
94.அரசலம்கரம்பை
95.கைகாட்டி
96.துலுக்கவிடுதி
97.அணவயல்
98.புள்ளான்விடுதி
99.மிதியடிக்காடு
100.எட்டியத்தளி
101.குப்பத்தேவன்
102.செம்பியன் மகாதேவி பட்டிணம்
103.படப்பனார்வயல்.
மேற்கண்ட பகுதிகளே பேராவூரணிக்கு புகழ் சேர்க்கும் சுற்றுவட்டார பகுதிகளாகும். இப்பகுதிகளை சேர்ந்தவர்கள் பலவித தூரங்களில் பிரிந்திருந்தாலும் அனைவரையும் இணைக்கும் ஒரே புள்ளி நமது பேராவூரணி தான்!!!!

பேராவூரணி புதிய ரயில்வே நிலையத்தில் நடைமேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

No comments

இதில் நீளமான நடைமேடை அமைக்கப்படுவதால் பேராவூரணி வாசிகள் மகிழ்ச்சி.
பேராவூரணியில் கடந்த 2010 ஆம் ஆண்டு வரை செயல்பட்டுவந்த இராமேஸ்வரம்-திருத்துறைப்பூண்டி ரயில் வழித்தடமானது அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுவருகிறது.
இந்த வழித்தடத்தில் காரைக்குடி வரை அகல ரயில்பாதையானது அமைக்கப்பட்டுள்ள நிலையில் பேராவூரணி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட நகரங்களில் புதிய அகல பாதை ரயில் விரிவாக்கப்பணிகள் நடந்துவருகிறது.
பேராவூரணியின் முக்கிய போக்குவரத்து வசதியாக இருந்த இந்த ரயில் சேவை கடந்த சில வருடங்களாக செயல்படாமல் இருப்பதால் பேராவூரணிவாசிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
பல வருடங்களாக ஆமை வேகத்தில் நடைபெற்றுவரும் இந்த புதிய அகல பாதை ரயில் விரிவாக்கப்பணிகள் முடிவுபெற பல வருடங்கள் ஆகும் என பேராவூரணிவாசிகளே தீர்மானித்துவிட்டனர்.
ஆனாலும் சில மாதங்களுக்கு முன்னர் புதிய ரயில்வே நிலையப்பணிகள் துரிதமாக தொடங்கப்பட்டது.


இதனால் பேராவூரணிவாசிகள் மகிழ்ச்சியடைந்திருந்தனர்.
இதன் அடுத்தக்கட்டமாக, பேராவூரணி புதிய ரயில்வே நிலையத்தில் நடைமேடை அமைக்கும் பணிகள் இரவு பகல் பாராமல் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

மிகப்பெரிய அளவில், மிக உயரமாக அமைக்கப்பட்டுவரும் இந்த புதிய நடைமேடையானது நாட்டாணிக்கோட்டை ரயில்வே கேட்டிலிருந்து, அருள்சாமி நாடார் கடை அருகே வரை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தண்டவாளம் அமைப்பதற்கான உள்கட்டமைப்புகளும் கட்டப்பட்டுவருகிறது.

இதனால் பேராவூரணிவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விரைவில் எல்லா கட்டமானப்பணிகளும் முடிக்கப்பட்டு விரைவில் ரயில் சேவை தொடங்கப்படவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar